Friday, July 26, 2013

நாவினால் சுட்ட வடு


ஒரு முன் கோபக்காரன் ஒருவன் இருந்தான்.
முணுக்கென்றால்அவனுக்குக் கோபம் வரும்.

கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்தபடி வயது வரம்பில்லாமல் எல்லோரையும் பேசிவிடுவான்.

பின்னர் அவர்களிடம் வருத்தப்படுவான். நாளடைவில் அவனை சுற்றுவட்டாரத்தில் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது.

அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.

அவனுடைய அப்பா பொறுத்துப் பொறுத்து பார்த்து விட்டு ஒருநாள் அவனிடம் ஒருவாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார். 

ஒவ்வொருமுறை ஆத்திரப்படும் போதும் சம்பந்தப்பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு 

வீட்டுக்குப் பின்னால் உள்ள மரவேலியில் ஒரு ஆணியை ஆத்திரம் தீரும்வரை அறைந்து ஏற்றிவிடும்படி அறிவுரைத்தார். 

முதல் நாள் வேலியில் சுமார் 50 ஆணிகளை அறைந்து ஏற்றினான். 

நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன்வன்மையாகப் பேசுவதைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொண்டான். 

கோபம் வந்தால்தான் உடனேஆணிஅடிக்கப் போக
வேண்டுமே! 

நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக்கொண்டு 

வேலிப்பக்கம் போகுமுன் கோப வெறிகுறைந்துபோய்,

வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது.

சிலநாட்களில் வேலியில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.

அப்பாவிடம் போய் விபரத்தைச் சொன்னான்.

அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் ஒருஆணி பிடுங்கும் கருவியைக் கொடுத்து வேலியில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். 

அனைத்தையும் பிடுங்க அவனுக்கு முழுதாக ஒருநாள் பிடித்தது. 

எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் வேலியை பார்க்கப் போனார்கள். 

அப்பா வேலியில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டி,

“கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடு சொல்லும்

இந்த ஆணியைப் போலத்தான். 

ஆணியைப்பிடுங்குவது போல் 

நீ பேசியதற்கு மன்னிப்புக்கேட்டாலும்,

அந்த சொல் தைத்த இடத்தில்உள்ளவடு

இந்த ஆணி ஏற்படுத்திய 

வடுவைப் போலவே மறைவது மிகக்கடினம்”

என்று அவனுக்கு எடுத்துக்கூறினார்.

மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி ஊர் போற்றும் 

வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றான். 

நீதி: 

தீயினால் சுட்ட புண் விரைவில் ஆறிவிடும். 

ஆனால்,

நாவினால் சுட்ட புண்ஆறாது,

மாறாக

வடுவாய் உள்ளத்தில் என்றும் இருக்கும்

-உடுமலை.சு.தண்டபாணி 


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

வந்து சென்றவர்கள்